15/09/2013

ஈழத்து படைப்புக்கள்-மதிசுதாவின் ”துலைக்கோ போறியள்” குறும்படம்

ஒரு படைப்பு எப்போது நாம் வாழும் சூழலை,எம் வாழ்க்கை முறையை, பேச்சுவழக்கு,கலாச்சாரங்களை பிரதிபலிக்கிறதோ அன்று தான் அது ஒரு முழுமையான படைப்பாக கருதப்படும். நம்மவர்களில் பலர் ஈழத்து சினிமா என்ற போர்வையில் இந்திய சினிமாவின் பிம்பங்களையே படைப்புகளாக வெளியிடுகின்றனர். அவர்கள் தங்கள் படைப்புகளை நம் நாட்டு ரசிகர்களுக்காக உருவாக்குகிறார்களா இல்லை இந்திய ரசிகர்களுக்காக உருவாக்குகிறார்களா என்ற சந்தேகம் பரவலாக எழும்.அந்த வகையில் நான் பகிரவிருக்கும் படைப்பு நமக்கான படைப்பு என்று ஆணித்தரமாக கூறுமளவிற்கு அவற்றின் உருவாக்கம் அமைந்திருக்கிறது.

நம் மண்ணிலிருந்து அண்மையில் வெளிவந்து மிகவும் ரசித்த ஒரு படைப்பு பதிவர் மதிசுதாவின்(மதியோடை)துலைக்கோ போறியள்குறும்படம். இவரின் வலைப்பூவை வாசித்தாலே புரிந்துவிடும் இவரது ரசனை. எம்மைப்போல பலர் வலைத்தளத்தில் அனேகமாக பகிரும் விடயம் சினிமா. ஆனால் மதிசுதாவின் அனேக பதிவுகள் எங்கள் மண் சார்ந்ததாயும் எங்கள் பழக்கவழக்கங்கள் பாரம்பரியம் , பேச்சுவழக்குகள் சார்ந்ததாயும் இருக்கும். அந்த அதிர்வுகளை தாங்கியே இந்ததுலைக்கோ போறியள்குறும்படம் அமைந்திருக்கிறது.இந்தகுறும்படம் வெளிவரமுன் இது சம்பந்தமாக மதிசுதா அவர்கள் சில முன்னோட்டங்களை வெளியிட்டிருந்தார். என்ன பெயர் வைத்திருப்பார் என்று பார்த்தால்துலைக்கோ போறியள்என்று இருந்தது.  பெயரை பார்த்தவுடனேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டதுபெயரிலே எங்கள் பேச்சு வழக்கு அதற்கு ஒரு பெரிய சல்யூட் மதிசுதாவிற்கு. என்னோட பாட்டி நான் சின்னவயசாய் இருக்கும் போது சைக்கிளில் நண்பர்களோடு புறப்பட்டால்எங்கையடா துலைக்கே போறாய்என்று கேட்பாங்க

துலைக்கோ போறியள்சிலருக்கு இது எந்த ஊர்த்தமிழ் என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.இது ஈழத்து பேச்சுவழக்கு சொல். ”துலைக்கோ போறியள்?” என்றால்எங்கே போறீங்க”  அல்லதுதூரத்துக்கு போறீங்களா?” என்று கேட்பதற்கு பிரதியீடாக யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையில் தமிழர் வாழும் அனேக பிரதேசங்களில்
பயன்படுத்தப்படும் சொல்வழக்கு. இந்தக்காலத்து இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தாவிடினும் கிராமங்களில் வசிக்கும் எங்கள் தாத்தாக்கள்,பாட்டிகள் இன்றும் ஒருவர் வீட்டை விட்டு கிளம்பும் போதுதுலைக்கோ போறியள்?” என்று கேட்பதுண்டு. இன்று இப்பேச்சு வழக்கு அரிதாகிவிட்டது

இப்போது குறும்படத்துக்குள் நுழையலாம்.


ஒரு மயானம்,ஒரு கல்லறை அழுக்கான சாரம்,நீல பெனியனுடன் ஒரு உருவத்தின் மேல் சூரியன் பட சோம்பல் முறித்து எழுகிறது. அந்த உருவம் வேறு யாருமல்ல நம்ம மதிசுதா அவர்கள் தான். இது தான் படத்தோட முதல் ப்ரேம். இந்த காட்சிக்கு அடுத்ததாக வரும் காட்சியை பார்த்தவுடனேயே யூரியூப்பில் லைக் பட்டனை கிளிக்கினேன்.
அப்டி என்ன காட்சி அது
தூக்கத்தால் எழுந்த அந்த மனிதன் பல் தீட்டுகிறான்,தலை சீவுகிறான்.
எப்படி இவற்றை செய்கிறான் என்பது தான் காமடி. நீங்களே பார்த்து சிரித்துக்கொள்ளுங்கள். அந்த சீன் ஒன்று போதும் படத்துக்கு.
அந்த காட்சியில் ஒரு தேர்ந்த நடிகனாக மதிசுதாவின் உடல் மொழி, ஒரு படைப்பாளியாக  அவரின் கற்பனைவளம் என்பவற்றை ரசிக்கலாம்.

ஒரு திருடனின் வாழ்க்கையின் ஒரு நாளின் ஒரு சில மணிநேரங்களில் நடக்கும் சம்பவங்களை படம்பிடித்து நகைச்சுவையோடு நின்றுவிடாமல் அதன் மூலம் சில சமுகக்கருத்துக்களையும் சொல்லிச்செல்கிறார் இயக்குனர்.இக்குறும்படத்தின் முக்கிய பாத்திரம் திருடனாக வரும் மதிசுதா.ஒற்றை வார்த்தியில் சொன்னால் “கலக்கியிருக்கிறார்” என்றே சொல்லலாம். எங்கள் பேச்சுவழக்கை அச்சு பிசகாமல் நாடகத்தனமில்லாமல் கையாண்டிருக்கிறார். வழமையாக நம்மவர்கள் இந்திய ஸ்லாங்கில் பேசிக்கொல்லும் கொடுமைகள் இங்கு இல்லை. முக்கியமாக உடல் மொழிகள்,முக பாவனை என்று அச்சு அசல் திருடனாகவே மாறியிருக்கிறார்.

”வெளிநாட்டில இருந்து வாறனியள் என்ன செய்யிறியள் ஒண்டு கடையை கட்டுறியள்.இல்லை கோயில கட்டுறியள். மிஞ்சி மிஞ்சி போனா கலியாணத்த கட்டுறியள்”
“வெளிநாட்டுக்காரங்கள் வந்து சுப்பர்மார்க்கட்ட கட்டி இருக்கிற காசுகளையில்லோ அள்ளிக்கொண்டு போறாங்கள்”
என்று திருடனாக வரும் மதிசுதா பேசும் நையாண்டி வசனங்கள் ரசிக்கவைக்கின்றன.

“ஐயா ஐயா ஐயோ” என்று ஏரம்பு ஐயா வீட்டு வாசலில் நின்று குசும்பாக கூப்பிடும் காட்சியும் கதிரையை ஆட்டையைபோட்டுவிட்டு வீதியில் ஒருவர் கேட்க “ஐயா கேக்கிற விலைக்கு கதிரை இல்லை” என்று சொல்லுவிட்டு மிகச்சாதரணமாக சைக்கிளை உருட்டிக்கொண்டுபோகும் காட்சியும்  சிரிக்கவைக்கிறது.இப்படியொரு சம்பவம் உண்மையிலே நடந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறேன்.
மதிசுதாவை தவிர “ஏரம்பு” தாத்தா மனதில் நிற்கிறார். அவருடைய வார்த்தை பிரயோகங்கள்,உடல் மொழிகள்,செயற்பாடுகள் என்று அளவான யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.சைக்கிள் கடைக்காரரும் அவர் பேசும் பேச்சுக்களும் எங்கள் ஊர் சாதாரணகுடிமக்களை ஞாபகப்படுத்துகிறது.இவற்றை தவிர சிகரட் பெட்டி வரும் காட்சியில் அப்பெட்டியிலே “SMOKING KILLS” என்ற வாசகம் ஒட்டப்பட்டிருப்பது வித்யாசமான சிந்தனை.இறுதிக்காட்சியில் திருடனை சைக்கிள்கடைகாரரே பிடிப்பதாக காட்டியிருப்பது புத்திசாலித்தனம். இப்படைப்பின் இன்னொரு பலம் இசை. தீம் பாடல் முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசையும் அளவான சேர்க்கை. நம்மவர்கள் வழமையாக குறும்படம் என்றால் ஒரிஜினலாக இசையை எடுக்காமல் சினிமா இசையை எடுத்து எடிட் பண்ணுவது வழக்கம். அப்படியில்லாமல் இங்கு நல்ல ஒரு இசையமைப்பாளரையும் அறிமுகம் செய்திருக்கிறார் இயக்குனர்.

படத்தில் குறைகள் என்று சுட்டிக்காட்டுவதற்கு அதிகம் தேவையில்லை. இருப்பினும் எங்கள் விமர்சனங்கள் மதிசுதாவின் அடுத்த படைப்புகளை இன்னும் மெருகூட்டலாம் என்பதற்காக சில கருத்துக்களை பகிர்கிறேன்.
வெளிநாட்டிலிருந்து வந்தவர் மற்றும் சைக்கிள் கடைக்காரர் இடையிலான காட்சியில் காத்திரமான கருத்தை சொல்லவந்தாலும் வெளிநாட்டு மனிதராக வருபவரின் இயல்பிலிருந்து மீறிய நடிப்பால் அக்காட்சி கொஞ்சம் ரசனையிழக்கிறது.நாடகத்தனமில்லாத இயல்பான நடிப்பை அவரிடமிருந்து எடுத்திருக்கலாம். சில காட்சிகளில் படத்தொகுப்பில் கொஞ்சம் கவனமெடுத்திருக்கலாம்.ஒரு காட்சி முடிவதற்கு முன்னர் மற்றைய காட்சி வருவது போலுள்ளது.வார்த்தையாடல்களுக்கு சரியான இடைவெளி கொஞ்சம் கொடுத்திருக்கலாம்.சில இடங்களில் இயக்குனர் சொல்லவந்த கருத்தை காட்சிகளின் அழுத்தமின்மை மறக்கடிக்கச்செய்கிறது.  

வெறுமனவே நகைச்சுவையோடு நின்றுவிடாமல் வெளிநாட்டிலிருந்து வருபவர்களிடம் ஊர் மக்களின் வேடிக்கையான எதிர்பார்ப்புக்கள்,சமுக ஏற்றத்தாழ்வுகள்,அதற்குள் மூழ்கிக்கிடக்கும் பழமைவாதம்(இதை ஏரம்பு ஐயா தண்ணீர் கொடுக்கும் காட்சியில் அழகாக காட்டியுள்ளார்) என்று ஆங்காங்கே சமுக பிரச்சனைகள் சிலவற்றையும் தூவியிருக்கிறார் இயக்குனர். ஒட்டு மொத்தத்தில் பார்த்தோமானால் ஒரு இயக்குனராக, நடிகராக மதிசுதாவிற்கு ஒரு நல்ல ஆரம்பம் என்றே சொல்லலாம். ஒரு படைப்பு என்பது எங்களை சுற்றித்தான் உள்ளது. அதை உருவாக்கும் இலகுவான வழிகளை இப்படம் கற்பிக்கிறது. இப்படியான படைப்புகளின் வருகைகள் நம் போன்ற ரசிகர்களுக்கு நிச்சயம் நம்பிக்கையை தருகிறது. இயக்குனரிடமிருந்து மேலும் புதிய ஆரோக்கியமான படைப்புக்களை எதிர்ப்பாக்கிறோம். ஒரு அச்சுஅசல் ஈழத்துப்படைப்பொன்றை உருவாக்கியதற்கு மதிசுதாவிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.


துலைக்கா போறியள் குறும்படத்தை பார்த்து ரசிக்க,
*************************************************************************

துலைக்கோ போறியள்http://www.youtube.com/watch?v=ocIKF_H1q_E


திரைக்கதை,வசனம்,இயக்கம்-மதிசுதா

நடிகர்கள்-மதிசுதா,ஏரம்பு, ஜெகதீபன், செல்வம், சுதேசினி, செல்லா

ஒளிப்பதிவு-செல்லா

படத்தொகுப்பு-செல்வம்

இசை-அற்புதன்



12/09/2013

ஈழத்து இசை-நண்பன் ”ஜீசஸ்”இன் இசைப்பயணம்.

சில வருங்கால பிரபலங்கள் எமக்கு பக்கத்திலே எங்களோடு ஒருவனாய் கூடவே இருக்கலாம்.ஒன்றாக எங்களோடு ஊர் சுற்றித்திரியலாம். ஒன்றாக டீ கடையில் உட்கார்ந்து வாழ்க்கையை பற்றிப்பேசிக்கொண்டே டீ குடிக்கலாம். அந்த நபர் எங்கள் நண்பர்களாக இருக்கலாம்,உறவினர்களாக இருக்கலாம்.பக்கத்துவீட்டு பையனாக கூட இருக்கலாம். ஆனால் இந்த உண்மை புலப்பட பலருக்கு சில காலங்கள் எடுக்கலாம். சிலருக்கு ஒரு உள்ளுணர்வு சொல்லும் இவன் நாளைக்கு ஒரு கலக்கு கலக்குவான் என்று.

என் நண்பன் ஜீசஸை பார்க்கும் போது எனக்கு அப்படியான ஒரு உள்ளுணர்வு ஒன்று தட்டிச்செல்லும். அவன் என் நண்பன் என்று என் சட்டை காலரை தூக்கிச் சொல்லும் காலம் தொலைவில் இல்லை. இது ஒரு வகை சுயபுகழ்ச்சி போல இருக்கலாம். அவன் அவ்வளவு பெரிய அப்பாட்டாக்கரா என்று கேட்கலாம். எனக்கு மட்டும் தான் தெரியும் என் நண்பனின் பயணத்தின் வடுக்களும் வலிகளும். இந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் இசை தான் வாழ்க்கை என்று சொல்லும் ஒரு இளைஞனை காண்பதே கடினம்.அப்படி எண்ணங்கள் இருந்தாலும் சொல்வதற்கு தயங்கலாம். எப்போதும் சமுகத்தின் வரையறைகளுக்கு கட்டுப்பட்டு இஞ்சினியர்,டாக்டர் கனவுகளுடன் வாழும் இளைஞர்கள் மத்தியில் இசையை தெரிவுசெய்த என் நண்பன் எனக்கு யதார்த்தமானவன். பலருக்கு விசித்திரமானவன்.  




எந்தவித இசைப்பின்னணியும் இல்லாமல் நான்கு நாட்கள் மட்டுமே ஒரு வாத்தியாரிடம் கீபோர்ட் கற்றுவிட்டு இன்று மெட்டமைத்து இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளனாய் என் நண்பன் மெருகேறியுள்ளான். ஆரம்பத்திலே விளையாட்டாக பக்கத்து சர்ச்சில் பயன்படுத்திய ஒரு மைக்கை  சிறு தடியில் கட்டி அதை ஒரு ஒரு பிளாஸ்டிக் கதிரையில் பொருத்தி வீட்டு ஹாலில் இருக்கும் ஒரு சிறு அறையில் வெள்ளைச்சீலை நான்குபுறமும் கட்டி ஒரு சிறிய ரெக்கார்டிங் தியேட்டர்(????) அமைத்திருந்தோம். அதை பயன்படுத்தி மிக குறைந்த தொழிநுட்பத்துடன் இரண்டு வருடங்களிற்கு முன்னர் சில பாடல்களை நண்பனின் இசையில் வெளியிட்டு இருந்தோம்.(அவை இப்போது நண்பனால் மீண்டும் மெருகேற்றப்பட்டுவருகின்றன) இப்படி ஆரம்பித்து படிப்படியாக பிழைகளை திருத்தி தரமான தொழிநுட்பத்துடன் “அடர்காட்டில் தானே” என்ற பாடல் நண்பனின் இசையில் வெளிவந்தது.இந்த பாடலின் இசைக்கு இன்னும் மெருகேற்றி அழகான வீடியோ பாடலாக ஹிமாலயா க்ரியேஷன்ஸ் வெளியிட்டனர். இந்த பாடல் யாழ்மண்ணிலிருந்து வெளிவந்த மிக தரமான பாடல்களில் ஒன்றாக அனைவராலும் பாராட்டப்பட்டது.இந்த பாடலுக்கு இலங்கையின் பிரபலான இசைக்கலைஞர்கள் தங்கள் பாராட்டுக்களை சமுக வலைத்தளங்களில் இட்டிருந்தனர்.

பாடல்- அடர்காட்டில் தானே
இசை-ஜீசஸ்
பாடல் வரிகள்- துவாரகன்
பாடி நடித்தவர்- நிஷாகரன்
ஒளிப்பதிவு&படத்தொகுப்பு-துஷிகரன்

பாடலை கேட்டு,பார்த்து ரசிக்க,

அடர் காட்டில் தானே -http://www.youtube.com/watch?v=I7WqGpE0cl0

நம் நாட்டு தமிழ் இசையை பொறுத்தவரை பலர் இசையமைக்கிறார்கள், பாடல் எழுதுகிறார்கள், பாடுகிறார்கள் ஆனால் ஒரு சிலரே அதை தொடர்ச்சியாக செய்கிறார்கள். பலரின் பயணம் இடையிலே தடைப்பட்டு விடும். என்ன தான் திறமையிருந்தாலும் சொந்த செலவில் ஒரு சில பாடல்கள் வெளியிடலாம்.தொடர்ந்து பாடல்கள் வெளியிடுவதற்கு ”பணத்திற்கு எங்கு போவது”? என்றொரு வினா எழ ஆரம்பித்ததும் எல்லாம் ஸ்தம்பிதமாகிவிடும். எனவே இப்பயணத்தில் பலர் இடைநடுவே தலைமறைவாகிவிடுகின்றனர். என்ன தான் கனவுகள் என்று சொல்லி பயணத்தை ஆரம்பித்தாலும் பணம் என்ற ஒரு பதார்த்தம் எல்லாவற்றையும் மூழ்கடித்துவிடும். கனவுகள் என்பது காசு உள்ளவனுக்கு மட்டுமே சாத்தியமானதொன்றாக உள்ளது.

ஆனால் என் நண்பன் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையுடன் தன் பயணத்தை தொடர்கிறான். தற்போது நண்பன் ஒரு இசை ஆல்பம் ஒன்றின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறான். மொத்தம் பத்து பாடல்கள் உள்ளடங்கலாக விரைவில் வெளிவர இருக்கிறது. அவன் பயணம் தொடரவேண்டும். அதற்கு நல்ல ரசிகர்கள்,நண்பர்கள்,ஊடகங்கள் ஆதரவு தரவேண்டும் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.அந்த ஆல்பம் சிறப்பாக வெளிவந்து வெற்றிபெற நண்பர்கள் அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நண்பனுடன் தொடர்புகொள்ள,

MOBILE- +94779251911 or 0779251911